ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய அமைந்துள்ளது. இந்த இடத்திலிருந்து கடந்த ஜூலை 14 ஆம் தேதி நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 3 என்ற விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்ணில் செலுத்தினர். இந்த சந்திராயன் 3 விண்கலமானது பூமி மற்றும் நிலவின் சுற்றுவட்டப் பாதையை முடித்து கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவில் தரையிறக்கபட்டது. சந்திராயன் 3 விண்கலத்தில் இருக்கும் ரோவரானது தற்பொழுது நிலவை ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சந்திராயன் 3 வெற்றிக்கு பின்னர் நிலவை தொடர்ந்து சூரியனை ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை தயார் செய்தது இஸ்ரோ. சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா சார்பில் அனுப்படும் முதல் விண்கலமாக ஆதித்யா எல் 1 உள்ளது.
இதையடுத்து, சூரியனை ஆய்வு செய்யவுள்ள ஆதித்யா எல் 1 விண்கலம் பிஎஸ்எல்வி சி 57 ராக்கெட் மூலம் இன்று காலை சரியாக 11. 50 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டு தனது பயணத்தை தொடங்கியதை இஸ்ரோ விஞ்ஞானிகள் கைகளை தட்டி கொண்டாடினர்.